ஒரு நாள் சுப்ரமணிய சிவா அவர்கள் பாரதியின் இல்லத்திற்கு வந்திருந்தார்.பாரதி திண்ணையிலே உட்கார்ந்துக் கொண்டு ஏதோ எழுதிக் கொண்டிருந்தார்.

பாரதியின் மனைவி செல்லம்மா வெளியே வந்து சிவா அவர்களை வரவேற்றார்.பாரதி எழுதுவதை நிறுத்தவில்லை.

வழக்கமான அளவளாவிற்கு பிறகு குடும்பத்தை நடத்துவதில் தான் எதிர்கொள்ளும் சிரமங்கள் பற்றி செல்லம்மா சிவாவிடம் புலம்பத் தொடங்கி விட்டார்.

வீட்டில் சமைப்பதற்கு அரிசியில்லை,பருப்பில்லை,பாரதி குடும்ப நிதி நிலைமை பற்றி சற்றும் கவலைப்படவில்லை என அங்கலாய்த்தார்.குடும்பம் இருக்கும் மோசமான நிலைமைப் பற்றி பாரதி தெரிந்துக்கொள்ளவே இல்லை என்றார்.

செல்லம்மா கண் கலங்கினார்.சுப்ரமணிய சிவா அவர்களுக்கும் என்ன செய்வது என்றே தெரியவில்லை.
சாதாரணமாக கையில் ஏதாவது பணம் வைத்திருப்பார் சிவா,அன்றைக்கு என்று பார்த்து கொடுத்துதவ அவர் கையிலும் பணமேதும் இல்லை.என்ன செய்வதென்றே அவருக்குத் தெரியவில்லை.

இருவரும் மெளனமாக இருந்தனர்.
திடீரென பாரதி தலை நிமிர்ந்து பார்த்தார்.
அவர்கள் திகைத்துப் போனார்கள்.

நடந்த பேச்சையெல்லாம் அவர் கேட்டு விட்டாரா ?
அங்கலாய்த்ததற்காக செல்லம்மாவிடம் சத்தம் போடப் போகிறாரா ?

ஆனால்…. அந்த கணத்தில் வித்தியாசமாக ஒன்று நடந்தது.

தான் எழுதியதை சிவாவிடம் காட்டினார் பாரதி.’ அவருடைய பிரபலமான ‘ எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா ‘ பாடலை எழுதி முடித்திருந்தார்.

அந்த இக்கட்டான மோசமான நிலையில் அவர் மனதில் உதித்து வெளியான பாடலிது.

ஸ்தித ப்ரக்ஞன் அல்லது ஜீவன் முக்தன் என்பது வாழும்போதே பரிபூர்ண சுதந்திரத்துடன் இருப்பதைக் குறிக்கும் சொல்.

மரத்தை அதன் இலைகள்,மலர்கள்,பழங்கள் மூலம் அறிவது போல…
ஒரு ஸ்தித ப்ரக்ஞனை அவனுடைய செயல்கள்,பழக்க வழக்கங்கள்,குணாம்சங்கள் மூலம் அறியலாம்.

வாழ்க்கையின் இன்ப துன்பங்கள்,நல்லதுகெட்டது,கெளரவம் அகெளரவம்,நற்குணங்கள் துர்குணங்கள் என்று எதுவுமே அவனை பாதிக்காது.

ஸ்தித ப்ரக்ஞன் அனைத்து விதமான பற்றுக்கள் மற்றும் வெறுப்புணர்வுகளிலிருந்து முற்றிலும் விடுபட்டவன்.

பாரதி என்னும் ஸ்தித ப்ரக்ஞனின் நினைவை போற்றுவோம் !!
திரு. Y S கண்ணன் அவர்களின் முக நூலில் இருந்து

DISCLAIMER: The author is solely responsible for the views expressed in this article. The author carries the responsibility for citing and/or licensing of images utilized within the text.