அவன் பெரும் பேரரசன் அல்ல, மாபெரும் சாம்ராஜ்யம் அமைத்தவன் அல்ல, ஆனால் அவனின் துணிவும் தைரியமும் மான உணர்வும் அவனை நிலைக்க செய்தது ஆம் தமிழக வரலாற்றில் ஏக்கர் கணக்கில் இடம்பிடித்து பெரும்புகழ் அடைந்தவர் கட்டபொம்மன்,

கட்டபொம்மன் காலத்திற்கு சற்றுமுன் நாயக்க அரசு ஆற்காடு நவாப்பிற்கு கைமாறிற்று, மொத்த தமிழக பகுதிக்கும் நவாப் தான் முதல்வர். ஆனால் பாளையக்காரர் எனப்படும் குறுநிலமன்னர்கள் அப்படியே நாயக்கர்களாய் இருந்தார்கள், அப்படி மதுரை அரசின் 72 பாளையங்களில் ஒன்று பாஞ்சாலங்குறிச்சி

அதாவது நாயக்கர்கள் மதுரை அரசினை 72 பாளையமாக பிரித்திருந்தார்கள், அதில் ஒன்று பாஞ்சாலங்குறிச்சி, நாயக்கரின் வீழ்ச்சிக்கு பின் நவாபிடம் அது வீழ்ந்தது

வீரபாண்டியபுரம் எனும் ஊரில் பிறந்து வளர்ந்த கெட்டிபொம்மு எனும் பெயரால் வீரபாண்டிய கட்டபொம்மன் ஆனார்

ஒருவழியாக கிளைவின் அதிரடியில்,கல்கத்தா தொடங்கி வெள்ளையன் ஒவ்வொரு அரசனாக பெண்டு நிமிர்த்தி மொத்த இந்தியாவை விழுங்கி தென்னகம் வந்து ஆற்காடு நாவாப்பையும் பிடித்தனர்.

வெள்ளையனின் பெரும் கூலிக்கு நவாப்பினால் கொடுத்து முடியவில்லை, ஒரு கட்டத்தில் வரி வசூலிக்கும் உரினையினை வெள்ளையனுக்கே கொடுத்தார் நவாப்

“நாட்டை நான் வச்சிக்கிறேன்..கப்பத்தை நீ வச்சிக்க” எனும் ஒப்பந்தம் அது

இதுதானே வெள்ளையருக்கு வேண்டும், நவாப் பாளையத்தாரிடம் வரிபிரிப்பார், அதனை கமிஷன் எடுத்துகொண்டு வெள்ளையருக்கு கொடுப்பார், அவர்களும் “தேங்க் யூ..தேங்க் யூ” என வாங்கிகொள்வர். யாராவது வரிகொடுக்காமல் அடம்பிடித்தால் அவர்களை வெள்ளையனுக்கு கை காட்டிவிடுவார், அவர்கள் வந்து அன்னாரை தண்டிப்பார்கள்.

வல்லாட்சி நடந்தது.

அப்படி நவாப் முதலில் கைகாட்டியது பூலித்தேவன், ஒரு குறுநிலமன்னர் எப்படியோ நாயக்கரை மீறி ஆட்சி செய்த தமிழ்மன்னன். பெரும் படையோடு வந்து அவரை ஆட்சி அகற்றியது யூசுப்கான் எனும் ராமநாதபுர தளபதி

அவர் பின்னாளில் மருதநாயகம்.

பூலித்தேவனை இறுதி வரை யாரும் கைதுசெய்யவில்லை. பெர்முடா மர்மம் போல இவரும் விடை தெரியா மகா மர்மம்.

ஆனால் நாயக்க மன்னர்களின் உதவி கிட்டவில்லை, தனிமனிதனாக போராடினார்,வீழ்ந்தார்.

மிக சரியாக 40 வருடம் கழித்து ஒரு நாயக்க மன்னனும் அதேபோல வெள்ளையனை எதிர்க்க ஆரம்பித்தார், ஆச்சரியமாக அவருக்கும் எந்த பாளையமும் உதவவில்லை, உயிரை விட்டார்.

அந்த நாயக்கமன்னன் தான் கட்டபொம்மன், எல்லோருக்கும் அவரைபற்றி தெரியும் என்பதால் அ,ஆ,இ.. என தொடங்கவேண்டாம். ஆனால் அவரை ஆழ்ந்து படித்தால் பல உண்மைகள் தெரியும்.

அதாவது அந்த காலத்தில் வெள்ளையருக்கு பெரும் சவால் மாவீரன் திப்புசுல்தான். சவால் என்றால் ராக்கெட் வீசி வெள்ளையனை அதிரசெய்யும் அளவிற்கு திகில் கொடுத்தார், இவரை அடக்காமல் இந்தியா நமக்கெல்ல என கம்பெனி முடிவுசெய்த நேரம். கடும் பண நெருக்கடியால் வரிகளை உயர்த்தினர்.

பெட்ரோல் விலை உயர்ந்தால், காய்கறிவிலையும் உயரும் அல்லவா?, நவாப்பும் வரி உயர்த்தினார். இங்குதான் கட்டபொம்மனுக்கு கோபம் வந்தது, ஆனால் நியாயமான வரியை அவன் செலுத்தித்தான் வந்தான்.

“வாருங்கள் இதற்கொரு முடிவு கட்டுவோம்” என எல்லா பாளையத்தையும் அழைத்தான் யாரும் வரவில்லை, மறைமுகமாக அந்த பாளையத்தாரை எச்சரித்தான், எச்சரிப்பு என்றால் எல்லை தகறாறு, “நீங்கள் வரவில்லை என்றால் உங்கள் கிராமங்களில் வரிபிரிப்பேன்” என்ற அதிரடி,

அப்படி செய்தும் காட்டினார்.

மற்ற‌ பாளையத்தார் கட்டபொம்மனை குறிவைத்தார்கள். வரிசை பெரிது எட்டயபுர பாளையம்,சிவகிரிபாளையம் என எல்லோருக்கும் கட்டபொம்மன் எதிரி ஆனார்.

உச்சமாக கூடுதல் வரியை செலுத்தவில்லை என கட்டபொம்மனுக்கு உரித்தான‌ திருவைகுண்டம் பகுதியை வெள்ளையர் கைபற்றினர்.

அப்பகுதி முப்போகம் விளைந்து அள்ளிகொடுக்கும் பகுதி சுருக்கமாக சொன்னால் இன்றைய பெட்ரோல் கிணறு.

பாஞ்சாலங்குறிச்சி வானம்பார்த்த பூமி.

வரி வசூல் பிரச்சினை இருந்தபொழுதே ஒரு பஞ்சகாலத்தில் திருவைகுண்டம் நெல்குடோனை அடித்து சென்றான் கட்டபொம்மன், இங்குதான் பிரச்சினை பெரிதானது.
ஆனால் திப்பு சுல்தானை தீவிரமாக எதிர்கொண்ட வெள்ளையர், கட்டபொம்மனை பின்னாளுக்கு மாற்றினர்.

அதாவது சர்ச்சைக்கிடமான கலெக்டர் ஜாக்சன் துரையை கூட இடம்மாற்றி தாங்கள் உத்தமர் என்பது போல காட்டிகொண்டனர், அதே நேரம் கட்டபொம்மனுக்கு பின்னால் எந்த பாளையமும் செல்லாதவாறு தந்திரமாக பார்த்தும் கொண்டனர்.

அக்காலம் கம்பெனி ஆட்சி, கம்பெனி எப்படிபட்ட ஆட்களை இந்தியாவிற்கு கொண்டுவந்தது என்றால் அது சுவாரஸ்யமானது

லண்டன் தெருக்களில் ரவுடிதனம் செய்தவர்கள், படிக்காதோர், கொஞ்சமும் மனிதாபிமானம் இல்லாதோர், கொலை செய்துவிட்டு தலைமறைவானோர் எல்லோரையும் பிடித்து இந்தியாவில் நீ கலெக்டர், நீ தாசில்தார், நீ எழுதுவியா? அப்படியானால் கவர்ணர் என அனுப்பிகொண்டிருந்தார்கள்

ஆம் தொலைதூர இந்தியாவுக்கு வர அன்று படித்த நல்ல லண்டன்வாசிகளுக்கு ஆசையில்லை, வந்ததெல்லாம் ஒரு மாதிரி கூட்டம்

ஜாக்சன் துரை அப்படி பட்டவன். கட்டபொம்மன் முதலில் செலுத்திய வரிகளை குழப்பி அவனுக்கு சினமூட்டியதே ஜாக்சன் துரைதான், அது பெரும் சர்ச்சையாகி ஜாக்சன் மாற்றபட்டாலும் கட்டபொம்மன் வெள்ளையன் கண்களில் அச்சமூட்டுபவனாகவே இருந்தான்.

ஒருவழியாக மைசூர் புலியினை மதவெறி தூண்டிவிட்டு சாய்த்தபின் மொத்த கோபத்தை கட்டபொம்மன் மேல் காட்டினர், பின்னர் விரட்டினர். வீரமங்கை வேலுநாச்சியாருக்கு பின் மருது சகோதரர்கள் ராமநாதபுரம் பக்கம் போராடிகொண்டிருந்தனர்.

அவர்களிடம் உதவிபெரும் பொருட்டுதான், கட்டபொம்மன் புதுகோட்டை ராமநாதபுரம் பகுதிகளில் சுற்றிகொண்டிருந்தார், அப்படி நடந்திருந்தால் வரலாறு மாறி இருக்கலாம்.

எட்டப்பன் காட்டிகொடுத்தான் என்பது வரலாற்று பதிவாயினும் உண்மையில் கட்டபொம்மன் கைதுக்கு காரணம் புதுகோட்டை சமஸ்தானம் என்பது இன்னொரு கோணம்.

புதுகோட்டையில் கைது செய்து பெரும் குற்றபத்திரிகை வாசித்தனர். அடுத்த பாளையங்களை அச்சுறுத்தியது,நெல்குடோனை கொள்ளையிட்டது (அது கொள்ளையா?), வரிகட்ட மறுத்தது, என என்னவெல்லாமோ குற்றம் சொல்லி அவரை தூக்கிலிட்டது கம்பெனி.

இது நடந்த வீர சம்பவம், ஒரு பெரும் வரலாறு, ஒரு சுதந்திர போராட்டம். நடந்தநாள் அக்டோபர் 16

நெல்லை பகுதியில் 1940வரை கதைபாடலாக அல்லது ஜக்கம்மா கோயில்கொடை போன்ற கொண்டாட்டங்களில் நடைபெற்ற நாடகம் இது. அப்பொழுதெல்லாம் கட்டபொம்மனை பற்றி நெல்லை தாண்டி யாருக்கும் தெரியாது.

சிலம்பு செல்வர் ம.பொ.சி தான் முதன்முதலாக “அட இங்கேயும் ஒருத்தன் வெள்ளைக்காரனை அடிச்சிருக்கான்” என ஆச்சரியபட்டு அந்த வரலாற்றை வெளிகொணர்ந்தார்.
உண்மையில் தமிழருக்கும், தமிழக உரிமைகளுக்கும், வரலாறுகள் நிலைத்திருக்கவும் பாடுபட்ட தமிழர்களுள் தலையானவர் ம.பொ.சி.

இன்று கட்டபொம்மனின் நினைவுநாள், ம.பொ.சி கண்ணில் பட்டபின் கட்டபொம்மன் தமிழகம் தாண்டி,இந்தியா தாண்டி எகிப்து அதிபரால் கூட கொண்டாடபட்டார்.

உபயம் சிவாஜி கணேசன்

தனக்கு மங்கா புகழ் கிடைக்க காரணமான கட்டபொம்மன் தூக்கிலடபட்ட இடத்தினில் சிவாஜி கணேசன் சொந்தமாக நினைவு சின்னம் நிறுவினார்

கயத்தாறில் முன்பு கட்டபொம்மன் தூக்க்கிலிடபட்ட இடத்தில் மக்கள் கல் வைத்து அஞ்சலி செலுத்துவார்களாம், மிக பெரும் கல் குவியல் குவிந்து கிடந்தது என்கின்றார்கள்

பின்னாளில் சிவாஜி சிலை வைக்கும்பொழுது அதெல்லாம் அப்புறபடுத்தபட்டு விட்டதாம், என்ன தான் சிவாஜி கணேசன் கட்டபொம்மனுக்கு சிலை வைத்தாலும், மக்கள் குவித்து வைத்த அந்த கற்குவியலே மாபெரும் நினைவு சின்னம்

அது அழிந்திருக்க கூடாது.

மக்கள் நாடி பார்ப்பதில் கருணாநிதிக்கு நிகர் இல்லை, மக்கள் அபிமானம் பெற்றவர் யாராக இருந்தாலும் கலைஞர் ஓடிப்போய் இணைத்துகொள்வார், அவர் இறந்திருந்தால் சிலைவைத்து போற்றுவார், அவரின் அரசு ஒரு பாஞ்சாலங்குறிச்சியில் மாதிரி கோட்டையை கட்டிவைத்து அவரின் அடையாளத்தை பாதுகாத்தது.

ஆயினும் பழம் கோட்டையின் அழிவுகளை கருணாநிதி அரசு கை வைக்கவில்லை, அவரால் முடியவும் முடியாது காரணம் அது தொல்பொருள் கட்டுபாட்டுக்கு சென்றாயிற்று, அது வேலியிடபட்டு அப்படியே இருக்கின்றது,

இன்று கட்டபொம்மன் மாவட்டம் பெயர் மாற்றமாகிவிட்டது, கட்டபொம்மன் போக்குவரத்து கழகும் மாறிற்று,

ஆனால் ஐ.என்.எஸ் கட்டபொம்மன் ஒருகாலமும் மாறபோவதில்லை, காரணம் ராணுவத்திற்குத்தான் போராட்டத்தின் கடினமும்,பெருமையும் புரியும்.

கட்டபொம்மனை தூக்கிலிட்ட மரம் இப்போது இல்லை, அவரை விசாரித்த சிறை பாழ்பட்டு கிடக்கிறது. கோட்டை தரைமட்டமாக்கபட்டிருக்கின்றது.

அவரை தூக்கிலிட்ட கயிறு நெடுங்காலம் பத்திரமாக இருந்தது இப்பொழுது காணவில்லையாம்,

பாஞ்சாலங்குறிச்சியிலிருந்து 90 கி.மீ தொலைவில் பத்மநாபபுரம் அரண்மனை மிக அழகாக எழுந்து நிற்கிறது நிற்கட்டும். ஆனால் இரண்டையும் காணும் ஒரு இந்தியனின் மனதில் உயர்ந்து நிற்பது இன்னும் பாஞ்சாலங்குறிச்சி மண்கட்டை இடம்தான் சந்தேகமே இல்லை.

இதுதான் கட்டபொம்மனின் வெற்றி.

தாமிரபரணி நதிக்கரை நெல்லின் மீது உங்களுக்கு என்ன உரிமை என கேட்ட கட்ட பொம்மனுக்கும், ஈராக்கிய எண்ணையின் மீது உங்களுக்கு என்ன உரிமை என கேட்ட சதாம் ஹூசைனுக்கும் என்ன வித்தியாசம் காட்டமுடியும்?

இருவரும் தூக்கு கயிற்றுமுன் வீரமாக முழங்கினார்கள், அவர் அரேபியாவின் கட்டபொம்மன் என்றால் இவர் நெல்லையின் சதாம் உசைன். நிச்சயமாக சொல்லலாம்.

வீரபாண்டிய கட்டபொம்மன் படம், எகிப்திலும் இன்னபிற சினிமா விரும்பும் அமைப்புக்களாலும் கொண்டாடபட்டுகொண்டிருந்த பொழுது, தமிழக நிலமை எப்படி தெரியுமா? சென்னையில் சினிமா முடிந்து வெளியே வரும்பொழுது இருவர் பேசிகொண்டார்கள்

“இந்த சிவாஜி கணேசனே இப்படித்தாம்பா, முடிவுல செத்துபோய்ருவாரு..இது மட்டும் நம்ம வாத்தியார் படமா இருந்துண்ணு வச்சிக்கோ”..அப்புடியே அவ்ளோபேரையும் சாய்ச்சிபுட்டு அந்த பாணார்மேன பந்தாடிருப்பாரு..

ஒரு வெள்ளக்கார பயலும் பாஞ்சாலங்குறிச்சிகுள்ள நுழைச்சிருக்க முடியாது..”

கனவு காண்பது மட்டுமல்ல, கனவிலே வரலாற்றையும் மாற்றி மகிழ்வான் தமிழன். இந்த மகோரா எனும் சனியன் அப்படி தமிழகத்தை கெடுத்து வைத்திருக்கின்றது

எப்படியோ நல்ல வேளையாக அவர் கட்டபொம்மன் படத்தில் நடிக்கவில்லை நடித்திருந்தால், அது வெளிநாட்டில் திரையிடபட்டிருந்தால் உலகம் என்ன சொல்லியிருக்கும்.

நல்ல வேளையாக இந்திய மானம் தப்பியது.

நெல்லை சீமையின் பெரும் வீரனும் இந்நாட்டின் மிகபெரும் சுதந்திர போராட்ட வீரனுமான அந்த கட்டபொம்மனுக்கு வீர வணக்கம்.

இன்றும் ஐ.என்.எஸ் கட்டபொம்மன் எனும் கடற்படை கேந்திரமாக இந்நாட்டையும் தென்னகத்தையும் காத்து நிற்கின்றான் அந்த மாவீரன் கட்டபொம்மன்

கட்டபொம்மன் மேல் சில சர்ச்சைகள் உண்டு, ஆனால் அவன் தாமிரபரணி நெல்லில் எமக்கு உரிமையா எங்கிருந்தோ கடல்தாண்டி வந்த வெள்ளையனுக்கு உரிமையா என கேட்டதில் நியாயம் இல்லை என யார் சொல்லமுடியும்?

அந்த பின்னாளில் உப்புக்கும் வரி என இந்தியா திரண்டபொழுது அதில் கட்டபொம்மனின் முகம் தெரிந்தது

கட்டபொம்மனின் கோட்டையும் திருசெந்தூர் ஆலயத்தில் இன்றும் இருக்கும் அவன் வணங்கிய சிலைகளும் அவனின் பெயரை எக்காலமும் சொல்லிகொண்டே இருக்கும், இந்தியாவின் சுதந்திர போராட்டத்தில் எக்காலமும் அவன் பெயர் இருக்கும்

இந்திய கடற்படை இருக்குமளவும் தென்னகத்தில் அவன் பெயர் இருக்கும்,

அவன் வணங்கிய திருசெந்தூர் முருகன் அவனுக்கு அருளிய பெரும் வரம் அது.

Stanley Rajan.

DISCLAIMER: The author is solely responsible for the views expressed in this article. The author carries the responsibility for citing and/or licensing of images utilized within the text.